நான் ரசித்தவை

நான் ரசித்ததில் பிடித்தது

Sunday 24 August 2014

குதிரையும் ஆட்டுக்குட்டியும்



ஒரு விவசாயி ஒரு குதிரையையும்,
ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான்.
அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த
நண்பர்களாக இருந்தன. ஒரு நாள்
அந்தக் குதிரை வைரஸ் நோயால்
பாதிக்கப்பட்டது. அதனால், அந்த
விவசாயி குதிரைக்குச்
சிகிச்சை அளிக்க
மருத்துவரை அழைத்து வந்தான்.

மருத்துவர் அந்த குதிரையின்
நிலையைப் பார்த்து, “நான்
மூன்று நாட்கள்
வந்து மருந்து தருகிறேன். அந்த
மருந்தைக் குதிரைக்குச் சாப்பிடக்
கொடுங்கள். அதைச் சாப்பிட்ட
குதிரை எழுந்து நடந்தால் சரி,
இல்லையெனில் அதனைக்
கொன்றுவிட வேண்டியது தான்”
என்று சொல்லியபடி குதிரைக்கான
மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
இவர்களது உரையாடலை அந்த
ஆடு கேட்டுக் கொண்டிருந்தது.
விவசாயியும் அந்தக்
குதிரைக்கு மருத்துவர் கொடுத்த
மருந்தைக் கொடுத்தான். மறுநாள்
வந்த மருத்துவர், குதிரையைப்
பார்த்து விட்டு, அன்றைய
மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
அந்த மருந்தையும் குதிரைக்குக்
கொடுத்தான் அந்த விவசாயி.
பின்பு சிறிது நேரம்
கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக்
குதிரையிடம், "நண்பா, நீ
எழுந்து நடக்க முயற்சி செய். நீ
நடக்கா விட்டால் அவர்கள்
உன்னைக் கொன்று விடுவார்கள்"
என்று அந்த
குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் மருத்துவரும்
வந்தார்.
அவர்
குதிரைக்கு மருந்து கொடுத்து
விட்டு, அந்த விவசாயிடம்
"நாளை குதிரை
நடக்கவில்லையெனில், அதனைக்
கொன்றுவிட வேண்டும்.
இல்லாவிட்டால், அந்த வைரஸ்
பரவி, மற்றவர்களுக்கும்
பரவிவிடும்." என்று சொல்லிச்
சென்றார்.
இதைக் கேட்ட ஆடு, அந்த
மருத்துவர் சென்றதும், குதிரையிடம்
வந்து, “நண்பா!
எப்படியாவது எழுந்து நடக்க
முயற்சி செய். நீ நடக்க முடியாமல்
போனால் உன்னைக்
கொன்று விடுவார்கள்”
என்று சொல்லியது.
அந்தக் குதிரையும்
முயற்சி செய்து மெதுவாக
எழுந்து நடக்கத் தொடங்கியது.
தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த
விவசாயி அசந்து போகும்படியாக
குதிரை ஓடியது.
மறுநாள் அந்த
விவசாயி மருத்துவரை அழைத்து
வந்து குதிரையைக் காண்பித்தான்.
அவன் மருத்துவரிடம், "என்
குதிரை நன்றாகக்
குணமடைந்து விட்டது.
அது நன்றாக ஓடத்
தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள்
கொடுத்த மருந்துதான் காரணம். என்
குதிரையைப் பிழைக்க வைத்த
உங்களுக்கு நல்ல
விருந்து ஒன்று கொடுக்க
வேண்டும். இந்த ஆட்டை வெட்டிப்
பிரியாணி செய்து கொண்டாடி
விடுவோம்” என்றான்.
குதிரை ஆட்டின் ஊக்கத்தால்
எழுந்து நடந்தாலும் மருத்துவர்
கொடுத்த மருந்தால்தான்
குதிரை குணமடைந்ததாகத்தான்
விவசாயி நினைத்தான்.
இப்படித்தான் இந்த உலகில் யாரால்
நன்மை கிடைத்தது என்பதை
உணராமல், பலரும் உண்மையைப்
பலி கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

Tuesday 29 April 2014

இன்பநிலை வெகுதூரமில்லை

என்றும் துன்பமில்லை, இனிச் சோக மில்லை 
பெறும் இன்பநிலை, வெகுதூர மில்லை 
இனி வஞ்சமும் பஞ்சமு மில்லை 
நெஞ்சை வாட்டிடும் கவலைக ளில்லை 
கொடும் வாதைக்கும் போதைக்கும் வேலை யில்லை 

எங்கள் வாழ்வினில் துயர்வரப் பாதையில்லை 
என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை 
நம் வாழ்வினில் துயர்வரப் பாதையில்லை 
என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை 

அன்புத் தாயெனும் கோயிலை நாடி 
அலைபாயுது ஆசைகள் கோடி 
என்னை வாவென்று தாவிடும் பாசக்குரல் 
வந்து வாழ்ந்திடும் போற்றிடும் நேசக்குரல் 

என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை 
பெறும் இன்பநிலை வெகுதூர மில்லை 
இங்கு சொல்வதும் செய்வதும் மோசம் 
வந்து சூழ்ந்திடும் நேசமும் வேஷம் (இங்கு) 

இனி செல்கின்ற தேசத்தில் பேதமில்லை 
கொடும் தீமை பொறாமை விரோதமில்லை 
என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை 
பெறும் இன்பநிலை வெகுதூர மில்லை



பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Sunday 30 March 2014

மெளனத்தில் புதைந்த கவிதைகள்

கம்மாக் கரையோரம் 
களையெடுக்கும் வேளையில 
கறுப்புக் கொடபுடிச்சுக் 
கரைவழியே போனீரு 

அப்ப நிமிந்தவதான் 
அப்புறமாக் குனியலையே 
கொடக்கம்பி போலமனம் 
குத்திட்டு நிக்கிறதே 

நீர்போனபின்னும் ஒம்ம 
நெழல்மட்டும் போகலையே 
நெஞ்சுக்குழியில் ஒம்ம 
நெழல்வந்து விழுந்திருச்சே 

வண்ண மணியாரம் 
வலதுகையிக் கெடியாரம் 
ஆனை புலியெல்லாம் 
அடக்கிவைக்கும் அதிகாரம் 

போறபோக்கில் ஒரு 
புஞ்சிரிப்பால் உசுர்கசக்கி 
வேரோட பிடுங்கிஎன்ன 
வெயில்தரையில் போட்டீரே 

வெல்லப் பார்வைஒண்ணு 
வீசிவிட்டீர் முன்னாடி 
தாங்காத மனசுஇப்பத் 
தண்ணிபட்ட கண்ணாடி 

* * * * * 
பச்சி ஒறங்கிருச்சு 
பால், தயிராத் தூங்கிருச்சு 
இச்சி மரத்து 
எலகூடத் தூங்கிருச்சு 

காசநோய்க்காரிகளும் 
கண்ணுறங்கும் வேளையில 
ஆசநோய் வந்தமக 
அரநிமிசம் தூங்கலையே 

ஒறங்காத கண்ணுறங்க 
உபாயம் ஒண்ணு உள்ளதய்யா 
அழகா! நான் ஒறங்கஒம்ம 
அழுக்குவேட்டி தாருமய்யா 

* * * * * 

குத்துதய்யா கொடையுதய்யா 
குறுகுறுன்னு வருகுதய்யா 
சூறாவளி புகுந்து 
சுத்துதய்யா தலக்குள்ள 

தைலந்தான் தேச்சேன் 
தலவலியோ தீரலையே 
நொச்சிஎல வச்சேன் 
நோய்விட்டுப் போகலையே 

தீராத தலவலியும் 
தீரவழி உள்ளதய்யா 
நீவச்ச தலையணைய 
நான்வச்சாத் தீருமய்யா 

* * * * * 
ஒருவாய் எறங்கலையே 
உள்நாக்கு நனையலையே 
ஏழெட்டு நாளா 
எச்சில் எறங்கலையே 

ஆத்து மீன்கொழம்பு 
அடுப்பில் கொதிக்கையில 
ஏழுதெரு மணக்கும் 
எனக்குமட்டும் மணக்கலையே 

சோறுதண்ணி கொள்ளஒரு 
சுருக்குவழி உள்ளதய்யா 
எங்கஞ்சி நீர்வந்து 
எச்சில்வச்சுத் தாருமய்யா 

* * * * * 
உள்நெஞ்சுக்குள்ள 
ஒம்மநான் முடிஞ்சிருக்க 
எங்கே எத்திசையில் 
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ? 

தவிப்புக்கு ஒருத்தன் 
தாலிக்கு வேறொருத்தன் 
எத்தனையோ பெண்தலையில் 
இப்படித்தான் எழுதிருக்கோ? 

ஏழப் பொம்பளைக 
எதுவும்சொல்ல முடியாது 
ரப்பர் வளவிக்குச் 
சத்தமிட வாயேது? 



வைரமுத்து

சிறுமியும் தேவதையும்.

திடீரென்று... 
மேகங்கள் கூடிப் 
புதைத்தன வானை 

ஒரே திசையில் வீசலாயிற்று 
உலகக் காற்று 

பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் 
உருண்டது பூமி 

மருண்டது மானுடம் 
அப்போதுதான் 
அதுவும் நிகழ்ந்தது 

வான்வெளியில் ஒரு 
வைரக்கோடு 

கோடு வளர்ந்து 
வெளிச்சமானது 

வெளிச்சம் விரிந்து 
சிறகு முளைத்த தேவதையானது 

சிறகு நடுங்க 
தேவதை சொன்னது: 

''48 மணி நேரத்தில் 
உலகப்பந்து கிழியப் போகிறது 

ஏறுவோர் ஏறுக என்சிறகில் 
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன் 

இரண்டே இரண்டு 
நிபந்தனைகள்: 
எழுவர் மட்டுமே ஏறலாம் 

உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும் 
உடன்கொண்டு வரலாம்'' 

* * * * * 
புஜவலியுள்ள இளைஞன் ஒருவன் 
சிறகு நொறுங்க ஏறினான் 

அவன் கையில் 
இறந்த காதலியின் 
உடைந்த வளையல் 
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு 

* * * * * 
'இன்னொரு கிரகம் கொண்டான் 
என்றென்றும் வாழ்க' 
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு 
சிறகேறினார் அரசியல்வாதி 

தங்கக் கடிகாரம் கழற்றியெறித்து 
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார் 

உள்ளே துடித்தது - 
சுவிஸ் வங்கியின் 
ரகசியக் கணக்கு. 

* * * * * 
இறந்துவிடவில்லையென்ற சோகத்தை 
இருமி இருமியே 
மெய்ப்பித்துக் கொண்டிருக்கும் 
நோயாளி ஒருவர் 
ஜனத்திரள் பிதுக்கியதில் 
சிறகொதுங்கினார் 

அவர் கையில் மருந்து புட்டி 

அதன் அடிவாரத்தில் 
அவரின் 
அரை அவுன்ஸ் ஆயுள் 

* * * * * 

அனுதாப அலையில் 
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான் 

ஜோல்னாப் பையில் - 
அச்சுப் பிழையோடு வெளிவந்த 
முதல் கவிதை 

* * * * * 
தன் மெல்லிய ஸ்பரிசங்களால் 
கூட்டம் குழப்பி வழிசெய்து 
குதித்தாள் ஒரு சீமாட்டி 

கலைந்த ஆடை சரிசெய்ய மறந்து 
கலைந்த கூந்தல் சரிசெய்தாள் 

கைப்பையில் 
அமெரிக்க வங்கிக் கடன் அட்டை 

* * * * * 
கசங்காத காக்கிச் சட்டையில் 
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி 
லத்தியால் கூட்டம் கிழித்துப் 
பொத்தென்று சிறகில் குதித்தாள் 

லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு 
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள் 

* * * * * 
'ஒருவர் 
இன்னும் ஒரே ஒருவர்' 
என்றது தேவதை 

கூட்டத்தில் 
சிற்றாடை சிக்கிய சிறுமியருத்தி 

பூவில் ரத்தஓட்டம் 
புகுந்தது போன்றவள் 
செல்ல நாய்க்குட்டியோடு 
சிறகில் விழுந்தாள் 

'நாய்க்குட்டியென்பது 
பொருள் அல்ல - உயிர் 
இறக்கிவிடு' 
என்றது தேவதை 

'நாய் இருக்கட்டும் 
நானிறங்கிக் கொள்கிறேன்' 
என்றனள் சிறுமி 

சிறகு சிலிர்த்தது தேவதைக்கு 
சிலிர்த்த வேகத்தில் 
சிதறிவிழந்தனர் சிறகேறிகள் 

வான் பறந்தது தேவதை 
சிறுமியோடும் செல்ல நாயோடும்.


வைரமுத்து



நண்பா உனக்கொரு வெண்பா

ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று 
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா 
வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர் 
அய்யத்தில் உள்ளோம் அடா! 

போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில் 
பாதை வழுவிய பாலுறவில் - காதைக் 
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில் 
நுழையும் உயிர்க்கொல்லி நோய்! 

இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின் 
எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா 
கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை 
விலைமகள் ஆசை விடு! 

கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ 
புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா 
முறையோடு சேராத மோகம் பிறந்தால் 
உறையோடு போர்செய்தே உய்! 

கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில் 
உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக் 
கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல் 
சும்மா இருத்தல் சுகம்! 

தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை 
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால் 
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு 
கற்பனையை வீட்டுக்குள் காட்டு! 

கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத் 
தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே 
காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால் 
கோவலனைக் கூசாமல் கொல்! 

ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப் 
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில் 
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச் 
செயற்கை உறவென்ன சீ! 

தேன்குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய 
ஊன்குடிக்க ஒட்டும் உயிர்க்கொல்லி - ஆண்மகனே! 
உல்லாச நோய்சிறிய ஓட்டையிலும் உட்புகுமே 
சல்லாப வாசலைச் சாத்து! 

மோகக் கிறுக்கில் முறைதவறிப் போனவர்கள் 
தேகம் இளைத்தபடி தேய்கின்றார் - ஆகப் 
பொறுப்பற்ற வாழ்வில் புகுந்தபலர் இங்கே 
உறுப்பற்றுப் போவார் உணர்! 

பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக் 
கண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே 
எரியூட்ட வேண்டும் இளைய குலம்வாழ 
அறிவூட்ட வேண்டும் அறி! 


துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு) 
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும் 
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த 
மானுடத்தை வாழ்விப்போம் வா!



வைரமுத்து


கவியரங்கில் கவியரசு

முச்சங்கங் கூட்டி 
…..முதுபுலவர் தமைக்கூட்டி 
அச்சங்கத் துள்ளே 
…..அளப்பரிய பொருள் கூட்டி 
சொற்சங்க மாகச் 
…..சுவைமிகுந்த கவிகூட்டி 
அற்புதங்க ளெல்லாம் 
…..அமைத்த பெருமாட்டி ! 

வட்டிக் கணக்கே 
…..வாழ்வென் றமைந்திருந்த 
செட்டி மகனுக்கும் 
…..சீர்கொடுத்த சீமாட்டி! 
தோண்டுகின்ற போதெல்லாம் 
…..சுரக்கின்ற செந்தமிழே 
வேண்டுகின்ற போதெல்லாம் 
…..விளைகின்ற நித்திலமே 
உன்னைத் தவிர 
…..உலகில்எனைக் காக்க 
பொன்னோ பொருளோ 
…..போற்றிவைக்க வில்லையம்மா! 
என்னைக் கரையேற்று 
…..ஏழை வணங்குகின்றேன்! 

மலையளவு நெஞ்சுறுதி 
…..வானளவு சொற்பெருக்கு 
கடலளவு கற்பனைகள் 
…..கனிந்துருகும் கவிக்கனிகள் 
இவைதலையாய் ஏற்றமுற்று 
…..இளந்தலைகள் வாழ்த்தொலிக்க 
அவைத்தலைமை ஏற்றிருக்கும் 
…..அன்புமிகும் என்தோழ! 

கூட்டத்தைக் கூட்டுவதில் 
…..கூட்டியதோர் கூட்டத்தில் 
நாட்டத்தை நாட்டுவதில் 
…..நற்கலைஞன் நீயிலையோ! 
அந்தச் சிரிப்பலவோ 
…..ஆளையெலாம் கூட்டிவரும் 
அந்தச் சிறுமீசை 
…..அப்படியே சிறைப்படுத்தும் 
சந்திரனைப் போலத் 
…..தகதகவென்றே ஒளிரும் 
அந்த வழுக்கையில்தான் 
…..அரசியலே உருவாகும்! 
எந்தத் துயரினிலும் 
…..இதயம் கலங்காதோய்! 
முந்துதமிழ் தோழ! 
…..முனைமழுங்கா எழுத்தாள! 
திருவாரூர்த் தேரினையே 
…..சீராக்கி ஓடவிட்டுப் 
பல்கும் மழைத்துளியைப் 
…..பரிசாகப் பெற்றவனே! 
கருணாநிதி தலைவ! 
…..கவிதை வணக்கமிது! 

போட்ட கணக்கிலொரு 
…..புள்ளி தவறாமல் 
கூட்டிக் கழித்துக் 
…..குறையாப் பொருள்வளர்க்கும் 
நாட்டுக்கோட்டை மரபில் 
…..நானும் பிறந்தவன்தான் 
ஆனாலும் என்கணக்கோ 
…..அத்தனையும் தவறாகும்! 
கூட்டுகின்ற நேரத்தில் 
…..கழிப்பேன்: குறையென்று 
கழிக்கின்ற நண்பர்களைக் 
…..கூட்டுவேன்; கற்பனை 
பெருக்குவேன்; அத்தனையும் 
…..பிழையென்று துடைப்பத்தால் 
பெருக்குவேன்; ஏதேதோ 
…..பெரும்பெரிய திட்டங்கள் 
வகுப்பேன்; வகுத்ததெலாம் 
…..வடிகட்டிப் பார்த்தபின்பு 
சிரிப்பேன்! அடடா! நான் 
…..தெய்வத்தின் கைப்பொம்மை! 

அன்றொருநாள் எந்தன் 
…..அப்பனோடும் என்அன்னை 
ஒன்றாமல் சற்றே 
…..ஒதுங்கிக் கிடந்திருந்தால் 
என்பாடும் இல்லை! 
…..என்னால் பிறர்படைத்த 
துன்பங்க ளில்லை! 
…..சுகமாய் அவர்கண்ட 
கூட்டலினால் என்னைஇங்கே 
…..கூட்டிவந்து விட்டுவிட்டார் 
கூட்டிவந்து விட்ட 
…..குறைமதியை என்தோழர் 
மேடையிலே கூட்டி 
…..விளையாட விட்டுவிட்டார் 
எத்தனையும் கூட்டி 
…..ஐந்தொகை போட்டுப்பார்த்தால் 
இத்தனைநாள் வாழ்வில் 
…..எதுமிச்சம்? என்அன்னை 
தந்த தமிழன்றிச் 
…..சாரம் எதுவுமில்லை 
‘போனால் போகட்டும் 
…..போடா! இறந்துவிட்டால் 
நானாரோ நீயாரோ!’ 
…..நல்ல பொழுதையெலாம் 
அழுதே கழிக்காமல் 
…..ஆடித்தான் பார்க்கின்றேன்! 
கொத்தும் இதழழகும் 
…..கொஞ்சும் இடையழகும் 
சேலம் விழியழகும் 
…..சேர்த்துப் பிறந்திருக்கும் 
கோலக் கிளிமொழிகள் 
…..கூட்டத்தைக் கூட்டுகின்றேன்! 
கையில் மதுக்கிண்ணம் 
…..கன்னி இளங்கன்னம் 
காதலுக்கே தோன்றினான் 
…..கவிஞன்எனும் வண்ணம் 

இரவை பகலாக்கி 
…..இன்பத்தைக் கூட்டுகின்றேன்! 
அரசியலைப் பேசி 
…..ஆத்மச் சிறகுகளை 
உரசிக் கொதிக்கவைத்த 
…..உற்பாதம் தீர்ந்துவிட்டேன்! 
உடைந்துவிட்ட கண்ணாடி 
…..ஒருமுகத்தைக் காட்டாது! 
ஒடிந்துவிட்ட மரக்கிளையை 
…..ஒட்டிவைத்தால் கூடாது! 
காலம் சிறிதென் 
…..கனவுகளோ பலகோடி! 
காதல் ரசத்தினிலே 
…..கனியக் கவிபாடிக் 
கனவில் மிதக்கின்றேன் 
…..கற்பனை நீராடி! 
எண்ணிவந்த எண்ணம் 
…..எல்லாம் முடிந்ததென்று 

கிண்ணம் உடைந்தால்என் 
…..கிறுக்கும் முடிந்துவிடும்! 
பிறப்பில் கிடைக்காத 
…..பெரும்பெரும் வாழ்த்தொலியும் 
இறப்பில் கிடைக்காதோ? 
…..என்கவிக்குத் திறமிலையோ? 
அண்ணனுக்குப் பின்னால் 
…..அழுதுவந்த கூட்டமெலாம் 
கண்ணனுக்குப் பின்னாலும் 
…..கதறுவர மாட்டாதொ! 
‘வாழ்ந்தநாள் வாழ்ந்தான்; 
…..வாழத் தெரியாமல் 
மாண்டநாள் மாண்டான்! 
…..மானிடத்தின் நெஞ்சத்தை 
ஆண்டநாள் ஆண்டான்! 
…..ஆண்டவனின் கட்டளையைத் 
தோள்மீதில் ஏற்றுத் 
…..தொடர்ந்தான் நெடும்பயணம்’ 

என்பாரும், ‘பாவி! 
…..எவ்வளவோ பொருள் சேர்த்தான் 
எல்லாமே தொலைத்தான்; 
…..எம்மைக் கதறவிட்டுப் 
போயினன்’ என்று 
…..புலம்பியழும் பிள்ளைகளும் 
கூட்டத்தில் சேர்ந்துவரும்! 
…..குழப்பம் முடிந்ததென 
நிம்மதியும் சில்லோர் 
…..நெஞ்சி பிறந்திருக்கும்! 
‘ஏடா அவலம்; 
…..என்ன இது ஒப்பாரி?’ 
என்பீரோ! சொல்வேன்! 
…..எல்லாம் மனக்கணக்கு! 
கூட்டல் எனஎன்பால் 
…..குறித்துக் கொடுத்தவுடன் 
கூட்டித்தான் பார்த்தேன் 
…..குடைந்து கணக்கெடுத்தேன் 
முடிவைத்தான் பாட 
…..முந்திற்றே யல்லாமல் 
வாழ்வைநான் பாட 
…..வார்த்தை கிடைக்கவில்லை


வைரமுத்து


இது போதும் எனக்கு

அதிகாலை ஒலிகள் 
ஐந்துமணிப் பறவைகள் 
இருட்கதவுதட்டும் சூரியவிரல் 
பள்ளியெழுச்சி பாடும்உன் 
பாதக்கொலுசு 
உன் கண்ணில் விழிக்கும் 
என் கண்கள் 

இதுபோதும் எனக்கு 

தண்ணீர் போலொரு வெந்நீர் 
சுகந்தம் பரப்பும் துவாலை 
குளிப்பறைக்குள் குற்றாலம் 
நான் குளிக்க நனையும் நீ 

இதுபோதும் எனக்கு 

வெளியே மழை 
வேடிக்கை பார்க்க ஜன்னல் 
ஒற்றை நாற்காலி 
அதில் நீயும் நானும் 

இதுபோதும் எனக்கு 

குளத்தங்கரை 
குளிக்கும் பறவைகள் 
சிறகு உலர்த்தத் 
தெறிக்கும் துளிகள் 
முகம் துடைக்க உன் முந்தானை 

இதுபோதும் எனக்கு 

நிலா ஒழுகும் இரவு 
திசை தொலைத்த காடு 
ஒற்றையடிப்பாதை 
உன்னோடு பொடிநடை 

இதுபோதும் எனக்கு 

மரங்கள் நடுங்கும் மார்கழி 
ரத்தம் உறையும் குளிர் 
உஷ்ணம் யாசிக்கும் உடல் 
ஒற்றைப் போர்வை 
பரஸ்பர வெப்பம் 

இதுபோதும் எனக்கு 

நிலாத் தட்டு 
நட்சத்திரச் சோறு 
கைகழுவக் கடல் 
கைதுடைக்க மேகம் 

கனவின் விழிப்பில் 
கக்கத்தில் நீ 

இதுபோதும் எனக்கு 

தபோவனக் குடில் 
தரைகோதும் மரங்கள் 
நொண்டியடிக்கும் தென்றல் 
ஆறோடும் ஓசை 
வசதிக்கு ஊஞ்சல் 
வாசிக்கக் காவியம் 
பக்க அடையாளம் வைக்க 
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ 

இதுபோதும் எனக்கு 

பூப்போன்ற சோறு 
பொரிக்காத கீரை 
காய்ந்த பழங்கள் 
காய்கறிச் சாறு 
பரிமாற நீ 
பசியாற நாம் 

இதுபோதும் எனக்கு 

மூங்கில் தோட்டம் 
மூலிகை வாசம் 
பிரம்பு நாற்காலி 
பிரபஞ்ச ஞானம் 
நிறைந்த மௌனம் 

நீ பாடும் கீதம் 

இதுபோதும் எனக்கு 

அதிராத சிரிப்பு 
அனிச்சப்பேச்சு 

உற்சாகப்பார்வை 
உயிர்ப் பாராட்டு 

நல்ல கவிதைமேல் 
விழுந்து வழியும் உன் 
ஒரு சொட்டுக் கண்ணீர் 

இருந்தால் போதும் 
எதுவேண்டும் எனக்கு?


வைரமுத்து

தவறு-மன்னிப்பு

சந்தோஷத்தை,
சஞ்சலத்தை,
சிலிர்ப்பை
என்று ஏதோ ஒன்றை தருவதாக…
முதல் தவறு மட்டும்
அச்சத்தையும்,
முதல் மன்னிப்பு கோரல்
வெட்கத்தையும் தருவதாக…
மன்னிப்பு கோரலுக்கு பயந்தே,
பல தவறுகள் கருவிலேயே இறந்துவிடுகிறது,
பிறகு எல்லாம்
பழகி விடுகிறது.
செய்வதருக்கு எந்த தவறும்
கேட்பதற்கு எந்த மன்னிப்பும்
குற்ற உணர்வு தருவதில்லை…
அப்புறம் பார்த்துக்கலாம்
என்கிற மனநிலை இருக்கிற வரை
தவறுகள் தொடரும்…
கடவுளே எத்தனை
பெரிய தவறுக்கும்
பாவமன்னிப்பு தரும்போது…
மனிதர்கள் மீதான அச்சம் எதற்கு?
மன்னிப்பு கேட்கிற
எத்தனை பேருக்கு -
பாதிக்கப்பட்டவரின் மனநிலை புரியும்…
ஆனாலும்
தவறு செய்யாமல்
இருக்கப்போவதில்லை…
மன்னிப்பு கோராமலும்
இருக்கப்போவதில்லை…
எல்லாமே பாவனையாக,
மன்னிப்பு கேட்டு, கேட்டு…
மன்னிப்பு கொடுத்து, கொடுத்து -
மன்னிப்புக்கு மரியாதை
இல்லாமல் போனது…
மன்னிக்கப்படுவோம்
என்பதாலேயே பல
தவறுகள் செய்கிறோமோ…
ஒரு நொடிப் பொழுதில்
விழும் அடி,
ஆறுவதற்கு காலங்கள் ஆகுமே
என்பதை உணர்வதில்லை…
யாரோ ஒருவரின் தவறால் -
நான் பாதிக்கப்படும் போது,
தவறின் வீச்சு புரிகிறது…
மன்னிக்க முடியாத
இயலாமையும் பிடிபடுகிறது…

  கண்ணதாசன்

கதவு…

பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன்
கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான் 
அவன் மேலும் சொன்னான்
கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன
பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல
கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது
கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்
மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது
நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்
ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா
கதவுதட்டும்
ஓசை கேட்டால்
யார் என்று
கேட்காதே
ஒரு வேளை அது நீயாக இருக்கலாம்
கவிக்கோ அப்துல் ரகுமான்

வெள்ளைக் காகிதம்

வெள்ளைக் காகிதம் ஒன்று
பனிக்கட்டி போலப்
பிரகாசமாய் , பரிசுத்தமா ய் இருந்தது..
அது சொன்னது,
“நான் பரிசுத்தமா னதாய்ப் படைக்கப்பட்டேன்..
இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..
இருள் என் அருகில் வர
இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்..
சுத்தமில்லாத எதுவும்
என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!”
கறுப்பு மைபுட்டி ஒன்று
காகிதம் சொன்னதைக் கேட்டது..
தனக்குள் சிரித்துக் கொண்டது..
ஆனாலும் காகிதத்தை நெருங்க
அதற்குத் தைரியம் வரவில்லை..!
பல வண்ண வண்ண பென்சில்கள் கூட
வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன..
ஆனால் அவையும்
அதை நெருங்கத் துணியவில்லை
இன்று வரை
வெள்ளைக் காகிதம்
தான் விரும்பியப டி
பரிசுத்தமா னதாகவே இருக்கிறது ..
ஆனால்,
வெறுமையாக இருக்கிறது ..!!

கலீல் ஜிப்ரான்

என் பழைய மொழி

நான் பிறந்து
மூன்று நாட்கள் ஆகியிருந்தன..
நான் தொட்டிலில் இருந்தபடி
என் புதிய உலகத்தை
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தேன்..
என் அம்மா,
செவிலித் தாயிடம் கேட்டாள்..
“எப்படி இருக்கிறான் என் மகன்..??”
அவள் சொன்னாள்..
“ரொம்ப நன்றாக இருக்கிறான்..
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்..
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான்
இதுவரை கண்டதேயில்லை..”
எனக்குக் கோபம் வந்தது..
நான் கத்தினேன்..
“அம்மா.. அது உண்மையில்லை..
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது..
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது..
அவள் மார்பகங்களின் வாசம் கூட
எனக்குப் பிடிக்கவேயில்லை..
நான் மகிழ்ச்சியாய் இல்லை..
மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!!”
ஆனால் என் அம்மாவுக்கோ,
என் செவிலித்தாய்க்கோ
நான் சொல்லியது எதுவும் புரியவில்லை..
ஏனென்றால் நான் பேசிய மொழி,
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது..
இந்தப் புதிய உலகத்தில்
அந்த மொழியை யாருமே பேசுவதில்லை..
இருபத்தியோரு நாட்கள் கடந்ததும்
எனக்குப் பெயர் சூட்டப்பட்டது..
பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி
என் தாயிடம்,
“நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே..
ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்..”
என்றார்..
நான் ஆச்சர்யத்துடன் அவரிடம்,
“அப்படியென்றால்
சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய்
துக்கப்பட வேண்டுமே..
ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!!” என்றேன்..
ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை..
ஏழு மாதங்கள் ஆன பிறகு,
ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து
என்னைப் பார்த்து என் தாயிடம்,
“உங்கள் மகன்
ஒரு சிறந்த தலைவனாய் வருவான்..
அதற்குறிய சமிக்ஞைகள் தெரிகின்றன..” என்றான்..
நான் கோபத்துடன்,
“தலைவனெல்லாம் கண முடியாது..
நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்..
வேறு எதுவும் ஆக மாட்டேன்..” என்று கூக்குரலிட்டேன்..
ஆனால், அந்த வயதிலும்
என் மொழி யாருக்கும் புரியவில்லை..
இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள்
கழிந்த பிறகு
என் அம்மா, செவிலித்தாய், பூசாரி
எல்லோரும் இறந்து போய் விட்டனர்..
ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்..
ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்..
என்னோடு பேசிக் கொண்டிருந்த போது
அவன் சொன்னான்..
“நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று
எனக்கு அப்போதே தெரியும்..
நீ குழந்தையாய் இருந்த போதே
நான் கணித்துச் சொன்னேன்..”
என்றான்..
நான் அவன் சொன்னதை நம்பினேன்..
ஏனென்றால்,
இப்போது
என் பழைய மொழியை
நானே மறந்து போயிருந்தேன்..!!
                                                                  கலீல் ஜிப்ரான்