நான் ரசித்தவை

நான் ரசித்ததில் பிடித்தது

Sunday, 30 March 2014

நண்பா உனக்கொரு வெண்பா

ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று 
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா 
வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர் 
அய்யத்தில் உள்ளோம் அடா! 

போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில் 
பாதை வழுவிய பாலுறவில் - காதைக் 
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில் 
நுழையும் உயிர்க்கொல்லி நோய்! 

இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின் 
எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா 
கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை 
விலைமகள் ஆசை விடு! 

கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ 
புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா 
முறையோடு சேராத மோகம் பிறந்தால் 
உறையோடு போர்செய்தே உய்! 

கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில் 
உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக் 
கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல் 
சும்மா இருத்தல் சுகம்! 

தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை 
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால் 
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு 
கற்பனையை வீட்டுக்குள் காட்டு! 

கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத் 
தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே 
காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால் 
கோவலனைக் கூசாமல் கொல்! 

ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப் 
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில் 
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச் 
செயற்கை உறவென்ன சீ! 

தேன்குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய 
ஊன்குடிக்க ஒட்டும் உயிர்க்கொல்லி - ஆண்மகனே! 
உல்லாச நோய்சிறிய ஓட்டையிலும் உட்புகுமே 
சல்லாப வாசலைச் சாத்து! 

மோகக் கிறுக்கில் முறைதவறிப் போனவர்கள் 
தேகம் இளைத்தபடி தேய்கின்றார் - ஆகப் 
பொறுப்பற்ற வாழ்வில் புகுந்தபலர் இங்கே 
உறுப்பற்றுப் போவார் உணர்! 

பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக் 
கண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே 
எரியூட்ட வேண்டும் இளைய குலம்வாழ 
அறிவூட்ட வேண்டும் அறி! 


துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு) 
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும் 
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த 
மானுடத்தை வாழ்விப்போம் வா!



வைரமுத்து


0 comments:

Post a Comment